bluehost

Saturday, April 24, 2021

உணவு


என்னுடைய நண்பர் ஒருவர், மற்றவர்கள் வீட்டில் உணவு உண்ண மாட்டார். "மற்றவர்கள் வீட்டில் சாப்பிட்டால் அவர்களின் குணம் எனக்கு வந்து விடும். கெட்டவர்களின் உணவை உண்டால் கெட்ட குணம் வந்துவிடும்" என்பார். (எங்களைப் போன்ற நல்லவர்களின் வீட்டில் உணவு உண்டால் உனக்கு நல்ல குணம் வருமே என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன்). அதற்கு வியாக்கியமாக மகாபாரதத்தில் இருந்து ஒரு கதை சொல்வார்.


பீஷ்மர் அர்ஜுனன் தொடுத்த அம்புகளால், உடல்முழுதும் தைக்கப்பட்டு அம்பு படுக்கையில் படுத்திருக்கிறார். அவர் விரும்பிய நேரத்தில் தான் உயிர் பிரியவேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தார். அதனால் உத்தராயண காலத்திற்காக காத்திருக்கிறார். அப்போது உயிர் துறந்தால் புண்ணியம். (சூரியன் ஆறு மாத காலம் தெற்கு நோக்கி நகரும். அது தட்சிணாயனம். அடுத்த ஆறு மாதம் வடக்கு நோக்கி நகரும். அது உத்தராயணம். தைமாதம் முதல் உத்தராயணம் ஆரம்பம் ஆகும்). பாண்டவர்கள் பீஷ்மரைக் காண வருகின்றனர். அவர்களுடன் திரெளபதியும் வருகிறாள். அவர்கள் பீஷ்மரை வணங்கி அறிவுரை சொல்ல வேண்டுகின்றனர். அவரும் மிக உன்னதமான தர்மநெறிகளை அவர்களுக்கு போதிக்கிறார். அப்போது இடையில் திரௌபதி "க்ளுக்" என்று சிரித்துவிடுகிறாள். எல்லோரும் அவளை சினத்துடன் பார்க்கின்றனர். பீஷ்மர் அவளிடம் காரணம் கேட்கிறார்.  "ஒன்றும் இல்லை. நான் முட்டாள்தனமாக சிரித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்கிறார். ஆனால் பீஷ்மர் "நீ முட்டாள் கிடையாது. புத்திசாலித்தனமான பெண். உண்மையான காரணத்தை சொல்" என்று கேட்கிறார்.


அதற்கு திரௌபதி "சபையில் துச்சாதனன் என்னை துகிலுறித்தபோது நீங்கள் ஏன் இந்த நியாயங்களை பேசவில்லை? மௌனமாக சிலைப் போன்று அமர்ந்திருந்தீர்கள்" எனக் கேட்கிறாள். பீஷ்மர் கடும் மனவேதனை அடைகிறார். பிறகு "நான் அப்பொழுது துரியோதனன் இட்ட உணவை உண்டு கொண்டிருந்தேன். என் ரத்தம் முழுதும் அவனின் கெட்ட குணம் நிரம்பி இருந்தது. அதனால்தான் அப்பொழுது நான் வாய் மூடியிருந்தேன். இப்போது அர்ஜுனன் விட்டு அம்பினால் அந்த கெட்ட இரத்தம் முழுவதும் என் உடலை விட்டு வெளியேறி விட்டது. அதனால்தான் நியாய தர்மங்களை தற்போது பேசுகிறேன்" என்கிறார்.


இந்தக் கதையை அந்த நண்பர் மேற்கோள் காட்டுவார். ஆனால் எனக்கு ஒரு ஐயம்? ரமண மகரிஷி போன்ற யோகிகள் நான்கைந்து வீடுகளில் பிச்சை எடுத்துதானே உண்டனர். அவர்களின் குணம் கெட்டுவிட்டதா?


ஒருவரின் வீட்டில் உண்ண மறுப்பது அவரை இழிவுபடுத்தும், நிராகரிக்கும் செயலாகும். சைவ உணவு பழக்கம் கொண்டவன் நான். ஆனால் அதை நண்பர்களின் வீடுகளில் கறாராக பின்பற்ற மாட்டேன். அவர்கள் அன்புடன் எது தந்தாலும் சாப்பிடுவேன். வேண்டாம் என்று மறுத்தால் அது ஒரு பிரிவினையை உண்டாக்கிவிடும். மோர் ஊற்றிய நீர் சாதம், கேழ்வரகு கூழ் முதல் அட்டகாசமான விருந்து சாப்பாடு வரை நண்பர்கள் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். அதேசமயம் அன்பும், மரியாதையும் இல்லாமல் அழைக்கப்பட்ட பெரும் விருந்துகளை புறக்கணித்து இருக்கிறேன். அன்பில்லாமல் பரிமாறப்படும் உணவு விஷம். 


2003ஆம் ஆண்டு. அப்போது நான் அவிநாசியில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு முறை அலுவலக வேலையாக சேலம் போய்விட்டு அவிநாசி திரும்பும்பொழுது எதிர்பாராதவிதமாக இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. உணவு உட்கொள்ளவில்லை. அங்கு ஒன்பது மணிக்கெல்லாம் கடைகளை சாத்திவிடுவார்கள். உணவகங்களும் மூடியிருந்தன. சாலையோரம் ஒரு தள்ளுவண்டியில் சாப்பாட்டுக்கடை இருந்தது. அருகில் போனேன். அதுவும் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த கடைக்காரர் "டிபன் தீர்ந்திடுச்சு சார்' என்றார். திரும்பி நடந்தேன். "சார்! ஒரு நிமிஷம்" என்று கூப்பிட்டார்.நின்றேன். "நான் சாப்பிடுவதற்காக கொஞ்சம் பரோட்டா வச்சிருக்கேன். வாங்க சாப்பிடலாம்" என்றார். முதலில் நான் வேண்டாம் என்று மறுத்தேன். இல்ல சார் வாங்க என்றார். அதற்குமேல் மறுத்தால் அவரை இழிவுபடுத்துவது போன்றாகிவிடும்.


பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் தந்தார். கைகளை கழுவிக்கொண்டேன். தள்ளு வண்டியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து போட்டு, என்னை உட்காரச் சொன்னார். ஒரு வாழையிலையில் மூன்று பரோட்டா, சிறிது சேர்வா ஊற்றி என்னிடம் தந்தார். மீதமிருந்த இரண்டு பரோட்டாக்களை இலையில் எடுத்துக் கொண்டு நடைபாதையில் உட்கார்ந்தார். ஒரு கருப்பு நாய் ஓடி வந்தது. நம்ம பையன்தான் என்று அதுக்கு பாதி பரோட்டாவை கிழித்துப் போட்டார். அது வாயில் கவ்விக்கொண்டு சிறிது தூரத்தில் சென்று அமர்ந்து நிதானமாக கடித்து சாப்பிட்டது. 


ஆளரவமற்ற நெடுஞ்சாலை‌. அவ்வப்பொழுது சீறிப்பாய்ந்து செல்லும் கனரக வாகனங்கள். சோடியம் விளக்கின் ஆரஞ்சு நிற ஒளி. மிதமான குளிர். அந்த இரவில் நான், அவர், அந்த நாய் மூன்று பேரும் சாப்பிட்டது - கடவுளின் தருணம் எனலாம்.


ஆச்சாரங்கள் - அகந்தையின் வடிவங்கள். 

அகந்தை - அன்பினை அறியாது.


சு.இரவிச்சந்திரன்


Wednesday, April 21, 2021

தந்தைமை – 1



சில நாட்களுக்கு முன்பு:

காலை எட்டரை மணி. என் பையனை பள்ளியில் விடுவதற்காக பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் இருப்பவர் தன் மகனிடம் ஏதோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.  சிறிது முரட்டுத் தோற்றம் உடையவர். சிவப்பு ராஜ்கிரண் என்று சொல்லலாம். சில அரசியல் தொடர்புகளும் உண்டு. அவர் தன் மகனிடம் “டேய் இன்னும் டைம் ஆகவில்லை. அவசரப்படாதே. காலேஜுக்கு நிதானமாகப் போகலாம். ஸ்கூட்டரில் மெதுவா போடா. ஹெல்மெட் எடுத்துக்கோ” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். பையன் அவர் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் வேகமாகச் சென்று ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான். அதற்குள் அவன் அம்மா “டேய்! லஞ்ச் பேக்கை விட்டுட்டு போறியேடா” என்று சத்தம் போட்டார். இவர் வீட்டின் உள்ளே ஓடிச்சென்று, லஞ்ச் பேக்கை எடுத்துக்கொண்டு வந்து பையனிடம் தந்தார். அவன் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டு, ஸ்கூட்டரில் வேகமாக பறந்தான். அவருடைய முகம் சட்டென்று மாறியது. மகன் அலட்சியப்படுத்தியன் வலி அதில் தெரிந்தது. அவருக்கு தெரிந்த ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். ஒரு ஆண் எப்போதும் தன் வலியை மற்றவர்கள் முன்பு வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது. வலியை முகத்திலிருந்து உதறி, புன்னகையை அணிந்துக் கொண்டார்.  “பசங்க நம்மள மதிக்க மாட்டேங்கிறாங்க” என்று அவரிடம் சொல்லிச் சிரித்தார்.

என் அப்பாவும் அப்படித்தான் நான் சைக்கிளில் ஸ்கூலுக்கு போகும் போது “பார்த்து போடா” என்று சொல்லுவார். அப்போது அதன் அருமை எனக்கு தெரியவில்லை. இப்போது என் பையன் சைக்கிளில் போகும்போது அதே வார்த்தையை நான் சொல்கிறேன். போனவாரம், பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பேக்கரியில், பிரெட் வாங்குவதற்காக என் பையன் சைக்கிளில் கிளம்பிப் போனான். அது பஸ் எல்லாம் வருகின்ற ரோடு. மனம் கேட்கவில்லை.  நான் சட்டை அணிந்து கொண்டு அவன் பின்னாடியே நடந்து போனேன். அவன் பேக்கரியில் ரொட்டி வாங்கி விட்டு, வெளியே சைக்கிளை எடுக்க வந்தான். நான் அவன் அருகில் போனேன். என்னைப் பார்த்து, “நீ ஏம்ப்பா வந்த? என்று கேட்டான். “ச்சும்மாதானான்” என்று சொல்லிவிட்டு, அதிக போக்குவரத்து இல்லாத வேறு ஒரு சந்தின் வழியாக அவனை வீட்டிற்கு போக சொல்லிட்டு, பின்னாலேயே நடந்து வந்தேன்.

மாலை ஏழு மணி. 

பையன் பக்கத்து தெருவில் உள்ள பேட்மிட்டன் கோர்ட்டுக்கு விளையாட போய் இருக்கிறான். பயிற்சி முடித்துவிட்டு எப்போதும் 7 மணிக்கு வீடு திரும்பி விடுவான். தாமதமானால் நானே பேட்மிட்டன் கோர்ட் வரை போய் விடுவேன். நான் தேடிப்போனால் என் பையனுக்கு பிடிக்காது “ஏம்பா! நான் இங்கதானே இருக்கேன். நீ ஏன் வந்த?” என்று கேட்பான். சில சமயம் தாமதமாகும் என்று முன்பே தெரிந்தால், போகும்போது அவன் “இன்னிக்கி டோர்னமெண்ட் ட்ரெய்னிங் இருக்கு. வரத்துக்கு லேட் ஆகும். என்னைத் தேடி அங்க  வந்துடாதே” என்று பொறுப்புடன் சொல்லி விட்டுப் போவான். இன்று ஒன்றும் சொல்லவில்லை. 

மணி 7.10 

மனதில் லேசாக பயம் பரவியது. என் மனைவியும் “என்னப்பா! இன்னும் வரல” என்று கலவரமானாள். ஆண்கள் தங்கள் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. என்ன ஆனாலும் வடிவேலு மாதிரி, முகத்தை கெத்தாக வைத்துக்கொள்ள வேண்டும். 

மணி 7.15 

சரி! போய் பார்த்துவிடலாம் என்று சட்டையை எடுத்து போட்டுக் கொள்ளத் தொடங்கினேன். அதற்குள், மணி அடித்தவாறே பையன் சைக்கிளை ஓட்டிக்கொண்டே, காம்பவுண்டுக்குள் நுழைந்தான். மனம் லேசானது.

புத்தனாவது சுலபம்*. ஆனால் அப்பனாக வாழ்வது கடினம்.

*புத்தனாவது சுலபம் – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையின் தலைப்பு.