bluehost

Sunday, November 8, 2020

புத்தர் கதை 1

 




இறவாத ஒன்றை, எனக்கு போதியுங்கள்

Teach me, which will not die


(எல்லோரும் சிறு வயதில் படித்தக் கதை; ஓஷோ முற்றும் வேறு கோணத்தில் சொல்கிறார். வார்த்தைகள் மட்டும் என்னுடையவை)


ஒரு இளம் தாய். அவளுடைய குழந்தை பாம்பு கடித்து இறந்து விட்டது. சில நாட்களுக்கு முன்புதான் அவளுடைய கணவனும் மரணம் அடைந்தான். அவளின் ஒரே துணை. அக்குழத்தைதான். அந்தப் பெண் கதறி துடிக்கிறாள். கண்டவர் நெஞ்சங்கள் கலங்குகின்றன. அப்போது ஒருவர் இந்த ஊரின் எல்லையில், மரத்தடியில் "ஒரு ஞானி அமர்ந்து இருக்கிறார். அவரிடம் சென்று கேள். அவர் உன் குழந்தையை உயிர்பிழைக்க வைக்கலாம்" என்கிறார். அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.


புத்தர் மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். அமைதியின் உருவம். அந்தப் பெண் அவரின் முன்பு கைகளில் குழந்தையை ஏந்தி, பிழைக்க வைக்குமாறு அழுகிறாள். அந்த பச்சிளம் குழந்தையின் முகத்தை கண்ட புத்தரின் மனம் ஒரு கணம் தடுமாறுகிறது. சட்டென்று புத்தர் மறைந்து சித்தார்த்தன் தோன்றுகிறார். அரண்மனையை விட்டு வெளியேறிய அந்த இரவில், படுக்கையில் தன் மனைவியுடன் உறங்கிக்கொண்டிருந்த தன் மகன் ராகுலனின் பச்சிளம் முகம் அவரின் நினைவுக்கு வந்தது. அவரிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்படுகிறது. 


"அம்மா! உன்னுடைய துயரம் மிகக் கொடியது. யாராலும் தாங்க முடியாதது." என்கிறார்.


அப்பெண் "சுவாமி! தயவுசெய்து என் குழந்தையை பிழைக்க வையுங்கள்"  என்று கெஞ்சுகிறாள்.


புத்தர், கண்கள் மூடி சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார். "யார் வீட்டிலாவது ஒரு படி எள் வாங்கி வா. உன் குழந்தையை உயிர் பிழைக்க செய்கிறேன்" என்கிறார். "ஒரு படி எள்தானே. இப்போதே வாங்கி வருகிறேன்" என்று அவள் ஓடத் தயாராகிறாள்.  புத்தர் "ஆனால், ஒரு நிபந்தனை - மரணமே நிகழாத வீட்டில் இருந்து வாங்கி வா" என்று முடிக்கிறார்.


அவள், ஒவ்வொரு வீட்டிலும் போய் இறைஞ்சுகிறாள். எல்லோரும் அவளுக்கு உதவ விரும்புகின்றனர். ஆனால், மரணம் நிகழாத வீடு என்று எதுவும் இல்லை. மாலையில் அவள் புத்தரைத் தேடி வருகிறாள். இப்போது அவள் தெளிந்திருந்தாள். கைகளில் குழந்தை இல்லை. தகனம் செய்திருந்தாள். "சுவாமி, மரணம் நிகழாத வீடு எதுவும் இல்லை. பிறந்தவர் அனைவரும் ஒரு நாள் இறப்பர். மரணம் தவிர்க்க இயலாதது. இயற்கையானது என்பதை அறிந்துக் கொண்டேன். அதனால், என்றும் இறவாத ஒன்றை எனக்கு போதியுங்கள் (Teach me which will not die)" என்று அவர் பாதம் பணிந்து சிஷ்யை ஆகிறாள்.


இத்துடன் ஓஷோ முடித்திருந்தால், நான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர் தொடர்கிறார் "அந்தப் பெண் இயேசுவிடம் சென்றிருந்தால் நிச்சயம் அவர் குழந்தையை உயிர்த்தெழ செய்திருப்பார். அது அவருடைய அணுகுமுறை. இருவரும் ஞானிகள்தான். ஆனால் புத்தர் வேறு, இயேசு வேறு" என்று முடிக்கிறார்.


புத்தர் ஏன் மரணம் இயற்கையானது என்று சொன்னார். இயேசு ஏன்  மரித்தவரை உயிர்த்தெழச் செய்தார். இது நமது சிந்தனைக்கு.


சு.இரவிச்சந்திரன்


No comments: