bluehost

Sunday, November 8, 2020

ஓஷோவும், நானும்






எனக்கு பத்து வயது இருக்கும்பொழுது, ராணி வார இதழில், ஓஷோவை பற்றிய கட்டுரை ஒன்றை படித்தேன்.  ஓஷோவும், ஒரு பெண்ணும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் அதில் இருந்தது.  அந்தரங்கப் பகுதிகள் கருப்பு மசி பூசி மறைக்கப்பட்டிருந்தன. ஓஷோ எனக்கு அறிமுகமானது இப்படிதான். 1992ல் ரஜினிகாந்த்தும், வினோத் கன்னாவும் ஒரு விழாவில் ஓஷோவின் புத்தகத்தை வெளியிட்டனர். எனக்கு "ஏன் அந்த செக்ஸ் சாமியாரின் புத்தகத்தை  இவர்கள் வெளியிடுகிறார்கள்" என்று அதிர்ச்சியாக இருந்தது.


1994ல் நடிகரும், ஒழுக்கவாதியான சிவகுமார், ஓஷோ எழுதிய "புல் தானாக வளர்கின்றது" என்ற புத்தகத்தை பற்றி ஆனந்தவிகடனில் எழுதி இருந்தார். அது என்னை மிகவும் ஈர்த்தது. நான் அந்த புத்தகத்தை வாங்கிப் படித்தேன். ஓஷோ நான் அதுவரை வைத்திருந்த அத்தனை முட்டாள்தனங்களையும் கருத்துக்களையும் அடித்து உடைத்தார். இப்படி கூட சிந்திக்க முடியுமா? என்று யாருமே சிந்தித்திராத புதிய கோணங்களில் அவருடைய சிந்தனைகள் இருந்தன. அவை எனக்குள் பல புதிய கதவுகளைத் திறந்தன.


ஓஷோ புத்தமதத்தின் ஞான மரபான ஜென் தத்துவத்தை பற்றி அதிகம் பேசுகிறார். அவருடைய தத்துவம் மிக எளிமையானது. "இங்கே, இப்பொழுது,(Now and Here) நிகழ்காலத்தில் வாழுங்கள்" என்பதே அது. "உலகத்தில் புனிதமானது என்பது எதுவும் கிடையாது. இழிவானது என்று எதுவும் கிடையாது. நல்லது, கெட்டது எல்லாம் நம் மனதின் தீர்மானங்களே. எதையும், யாரையும் பின்பற்றாதீர்கள். பின்பற்றுபவன் - ஒரு அடிமை. எந்த ஒரு கருத்தியல்குள்ளும் சிக்கிக் கொள்ளாதீர்கள்" என்கிறார்.


  • தியானத்தைப் பற்றி ஓஷோ:

ஒரு செயலை செய்யும் போது, செய்பவன்(Subject), செய்யப்படும் பொருள்(Object) இரண்டுமே இருக்கக் கூடாது. செயல்(Action) மட்டுமே இருக்க வேண்டும். அதுதான் தியானம் என்கிறார். ஒரு இசைக்கருவியை நீங்கள் இசைக்கும்போது, இசைப்பவன், இசைக்கருவி இரண்டும் இருக்கக்கூடாது. இசை மட்டுமே இருக்க வேண்டும். இதனை நீங்கள் மைக்கேல் ஜாக்சன் நடனமாடும்போது காணலாம். ஜாக்சன் நடனமாடும்போது, ஆரம்பத்தில் அவர்தான் நடனமாடுவார். சிறிது நேரத்தில் நடனம் அவரை ஆக்கிரமித்து, ஆட்டிவைக்க ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் அங்கு நடனம் மட்டுமே இருக்கும். ஜாக்சன் மறைந்துவிடுவார். இந்த கரைதலையே, ஓஷோ தியானம் என்று சொல்கிறார்.


  • காமத்தை பற்றி ஓஷோ: 

காமத்தை பற்றி ஓஷோ எழுதிய புத்தகங்கள் நான்கு அல்லது ஐந்துதான் இருக்கும் ஆனால் அவரை செக்ஸ் சாமியார் என்று வர்ணித்து பத்திரிகைகள் எழுதின. "காமம் ஒரு குற்றமல்ல. பாவம் அல்ல. ஞானத்தை அடைய அது ஒரு பெரும் தடையுமில்லை. ஞானத்தை அடைய அதுவும் ஒரு வழி" என்று சுட்டிக்காட்டுகிறார். உடல் இன்பத்தை நமது பண்பாடு கொண்டாடியது. அந்நிய மதங்கள்தான் அதனை ஒரு பெரிய பாவம் என்று கூறி கண்டித்தன. "எதை அடக்கி வைக்கின்றோமோ, அது ஒரு காலகட்டத்தில் வெடித்து கிளம்புகிறது" என்று ஓஷோ கூறுகிறார். இன்று நிர்பயா போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு இந்த அடக்குதல்தான் காரணம். "காமத்தின் மூலமாகதான் சிருஷ்டி நடைபெறுகிறது. அது ஒரு பெரிய குற்றச் செயல் அல்ல. காமம் இயல்பான ஒன்று. அதனைக் கடந்துதான் ஞானத்தை அடைய முடியும். மறுத்து அல்ல"  என்று ஓஷோ கூறுகிறார். மேலும் இதைப்பற்றி அறிந்து கொள்ள ஓஷோ எழுதிய "காமத்திலிருந்து கடவுளுக்கு" என்ற நூலைப் படிக்கவும்.


  • போலி சாமியார்கள் பற்றி ஓஷோ:

"நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைகிறாய். நீ பேராசை கொண்டவனாக இருந்தால், ஏமாற்றுக்காரர்களிடம் தஞ்சம் அடைவாய். ஞானத்தேடல் கொண்டவனாய் இருந்தால், உண்மையான ஞானியை சென்றடைவாய். சிஷ்யன் குருவை தேடுவது என்பது அகந்தை. குருவே சிஷ்யனை தேடுகிறார்" என்கிறார்.


  • துறவு பற்றி ஓஷோ:

காவி அணிவதோ, தலையை மழிப்பதோ, முடியை வளர்ப்பதோ, தாடி வளர்ப்பதோ, தலைக்கீழாக நிற்பதோ, துறவு அல்ல. மனதை துறத்தலேயே என்கிறார். 


  • செல்வந்தர்களின் குரு:

அவர் தன்னை செல்வந்தர்களின் குரு என்று அழைத்துக்கொண்டார். ஆன்மீகம் என்பது வறுமையை கொண்டாடுவது அல்ல. தன்னை வருத்திக் கொள்வது அல்ல. வாழ்க்கையை கொண்டாடுவது. ஒவ்வொரு வினாடியும் வாழ்க்கையை கொண்டாடுவதே தியானம் என்கிறார். 


ஓஷோவின் நூல்கள், படிப்பதற்கு மட்டுமல்ல பரிசோதித்துப் பார்ப்பதற்கும். ஓஷோ - ஒரு வழிகாட்டி. உங்கள் முன்பு இரண்டு வழிகள்(Choices) உள்ளன. ஒன்று இவனெல்லாம் ஒரு சாமியார் என்று கேலி பேசி, அவர் மீது மலத்தை எறிந்துவிட்டு, தன்னுடைய புத்திசாலித்தனத்தை குறித்து குதூகலம் கொள்வது. இரண்டாவது அவர் காட்டிய வழியில், நம் பயணத்தைத் தொடங்குவது. அது நெடுந்தொலைவு பயணம். பல பிறவிகள் கடந்து செல்லும் பாதை. நாம் ஓஷோவிடம் இருந்துதொடங்குவோம்.



மனிதன் ஒரு வித்தியாசமான பிறவி. இறந்துபோன குருவை கொண்டாடுகிறான். வாழ்கின்ற குருவை கொல்லத் துடிக்கிறான்.
-ஓஷோ

No comments: