bluehost

Sunday, November 8, 2020

புத்தர் கதை 2



சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தரைப் பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளங்களில் சுற்றி வந்தது, புத்தர் தனது இளம் மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் கைவிட்டுவிட்டு காட்டுக்கு ஓடிப் போன ஒரு கொடுமைக்காரர், கோழை, சுயநலவாதி என்று. நானும் புத்தரைப் பற்றி பல விஷயங்களை படித்து இருக்கின்றேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோணத்தில் நான் யோசிக்கவில்லை. புத்தரின் மனைவி யசோதரையின் துன்பம் மிகக் கொடியது. இருந்தாலும் இவர்கள் புத்தரை ஏன் குற்றவாளியாக ஆக்குகின்றனர். ஞானிகளை ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை? ஓஷோ, அதை விளக்குகிறார்.


புத்தர் ஞானத்தை அடைந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்க்கவே விரும்பினார். அதற்கு அவருடைய பிரதம சீடர் ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் புத்தரின் பெரியப்பா மகன். அண்ணன் முறையும் கூட. "நீ துறவி. எப்படி மனைவியை பற்றி நினைக்கலாம்?" என்று கேட்கிறார். ஆனால் புத்தர் "யசோதரை எனக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறாள். அவளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டு உள்ளேன். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை அவளுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்றார். தன் மனைவியை காண 12 ஆண்டுகள் கழித்து அரண்மனைக்குப் போகிறார்.


புத்தரை பார்த்தவுடன் அவர் மனைவி அத்தனை ஆண்டுகள் அடக்கி வைத்த கோபத்தையும் துக்கத்தையும் கொட்டி தீர்க்கிறாள். அவர் அமைதியாக கேட்கிறார். "என் மீது உங்களுக்கு அன்பு இல்லையா? என்னையும், குழந்தையையும் தவிக்கவிட்டு பிரிந்து செல்ல எப்படி உங்களுக்கு மனம் வந்தது?" என்று அவள் கேட்கிறாள்.


"என்னிடம் இருந்து தப்பிச் செல்லவே உன்னைப் பிரிந்தேன். உன் மீது உள்ள அன்பினால்தான் உன்னைக் காண மீண்டும் வந்தேன். உன்னை நான் இப்போதும் காதலிக்கிறேன். ஆனால் முன்பிருந்த காதல் வேறு. இப்போதிருக்கும் காதல் வேறு" என்கிறார்.


அவர் மனைவி "நீங்கள் என்னை பிரிந்து சென்றதை பற்றி எனக்கு கோபம் இல்லை. ஏன் என்னிடம் சொல்லாமல் போனீர்கள். அதுதான் எனக்கு மிகுந்த துன்பத்தை தருகிறது. என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? திரும்பி வருவீர்களா என்று தெரியாமல் போர்க்களத்திற்கு உங்களை வழி அனுப்பி வைத்தவள் நான். நீங்கள் சத்தியத்தை தேடி போகிறீர்கள் என்றால் நான் எப்படி தடுப்பேன்?" என்று கேட்கிறாள்.


புத்தர் அதற்கு "என்னை மன்னித்து விடு. நீ தடுக்க மாட்டாய் என்று தெரியும். எனக்குதான் உன்னிடம் விடைபெற்று போகும் தைரியம் இல்லை" என்கிறார்.


யசோதரா "நீங்கள் எங்களைப் பிரிந்து சென்று எதைக்கண்டடைந்தீர்கள்? அதை இங்கேயே நீங்கள் அடைய முடியாதா?" என்று கேட்கிறாள்.


புத்தர் "நான் அப்பொழுது அறியாமையில் இருந்தேன். காட்டில் கண்டடைந்ததை, சந்தடி நிறைந்த சந்தையிலும் அடையலாம். எங்கும் ஞானத்தை அடையலாம். ஏனென்றால் உண்மை எங்கும் நிறைந்துள்ளது. அது அப்போது எனக்கு தெரியாது.


நடந்த தவறுகளை மறந்து விடு. என்னை உற்றுப் பார். எனக்குள் ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. அதனை உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே வந்தேன்" என்கிறார்.  


யசோதரா அவரைப் பார்க்கிறாள். இது பழைய சித்தார்த்தன் அல்ல.  இந்த மனிதருக்குள் ஏதோ ஒன்று மலர்ந்து இருக்கின்றது. அவரை சுற்றி ஒளிவட்டம் வீசுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் அவளின் நெஞ்சில் கனன்ற கனல் அணைந்து மனதில் அமைதி சூழ்கிறது. யசோதரா, புத்தரின் பாதம் பணிகிறாள். புத்தர் அவளுக்கு தீட்சை அளிக்கிறார்.


அவளின் கண்ணீர் பாதங்களில் பட்டு புத்தர் மேலும் புனிதராகிறார்.


No comments: