சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், ஜாதி என்ற உணர்வே இல்லாமல் வளர்ந்தேன். என் மனைவியிடம், அந்த சட்ட கல்லூரி விவகாரத்தை பற்றி பேசும்போது, அவளும் ஜாதி துவேசத்தை ஆதரித்து பேசியது, எனக்கு மிகமிக அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அவளிடம் என் பள்ளி வாழ்க்கையில், பன்னிரெண்டாம் வகுப்பில் (1991) நடந்த ஒரு சம்பவத்தை சொன்னேன். அதனை உங்களுடனும் பகிர்த்து கொள்கிறேன்.
சில பின்குறிப்புகள் :
நான் படித்தது, கொண்டிதோப்பில், அம்மன் கோயில் தெருவில் உள்ள Dr.G.M.T.T.V. பள்ளியில். எல்லா மாணவர்களும் அன்பாகத்தான் பழகினோம். என்.எஸ். சி . -எங்கள் வகுப்பு ஆசிரியர். செந்தில் குமார், நடராஜன் - இருவரும் என் நண்பர்கள். இங்கு ஜாதியை குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும். செந்தில் - எஸ். சி. நடராஜன் - பிராமின் . எங்கள் நட்புக்கு இடையே ஜாதி என்றும் ஒரு விஷயமாகவே இருந்தது இல்லை. அனந்த ராமன் என்ற மாணவனும் எங்களுடன் படித்தான் . செந்திலுக்கும், அனந்த ராமனுக்கும் வகுப்பில் முதலாவதாக வருவதற்கு போட்டி நிலவும். அப்பொழுது, என்.எஸ். சி , பிராமினான அனந்த ராமனுக்கு இலவசமாக டியூஷன் எடுத்தார். பிரக்டிகல் தேர்விலும் பல உதவிகள் செய்தார். ஆனால், திறமையான மாணவனான செந்திலுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பொது தேர்வு முடிவுகள் வந்தது. அதில் அனந்த ராமன் பள்ளியில் முதல் மாணவனாகவும், செந்தில் 2வது மாணவனாகவும் தேர்ச்சி பெற்று இருந்தனர். செந்தில் சில பாடங்களில் முதலாவதாக வந்திருந்தான். என்.எஸ். சி , செந்திலுக்கு உதவி இருந்தால் அவன்தான் முதல் மாணவனாக வந்திருப்பான். செந்தில் K.M.C. இல் MBBSசேர்ந்தான். அனந்த ராமன் MGR MEDICAL COLLEGE-இல் MBBSசேர்ந்தான்.
இதை விட மிக அசிங்கமானது - ஒவ்வொரு படத்திலும் முதல் மதிப்பெண் எடுப்பவருக்கு பள்ளி டிரஸ்ட் பரிசு தரும். என்.எஸ். சி, செந்திலுக்கு வர வேண்டிய பரிசினை எல்லாம் அனந்த ராமனுக்கு கொடுத்து விட்டார்.அதனை கேட்க சென்ற எங்களை பார்த்தும், என்.எஸ். சி, "ஐயோ! என்னை அடிக்க வராங்க " என்று கத்தி கொண்டே ஓடி ஒளிந்து கொண்டார்.
இனி நான் சொல்ல வரும் விஷயம்தான் மிக முக்கியமானது. நடராஜன் பொது தேர்வுக்கு முன் செந்திலுக்கு, கணித பாடமான DIFFERENTIATION ஒரு நாள் சொல்லிகொடுத்தான். மருத்துவ கல்லூரில் சேர்ந்த பின் செந்தில், நடராஜனுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் " நடராஜன், நான் டாக்டர் ஆவதற்கு நீதான் காரணம். நீ அன்னிக்கி DIFFERENTIATION சொல்லி குடுக்கவில்லை என்றால் நான் டாக்டர் ஆகி இருக்க முடியாது" எனக் குறிப்பிட்டு இருந்தான். உதவி செய்தவனையே, மறக்கும் காலத்தில், என்றோ செய்த சிறு உதவியை குறிப்பிட்டு " டாக்டர் ஆவதற்கு நீதான் காரணம் " என்று சொல்வது , செந்திலின் உன்னதமான குணத்தையே காட்டுகிறது. ஆனால், ஒரு ஆசிரியராக இருந்தும் என்.எஸ். சி - தன் ஜாதியை சேர்ந்த அனந்த ராமனுக்கு மட்டும் உதவி செய்தார். செந்திலுக்கு உதவி செய்யவில்லை.
M.Sc. B.Ed எல்லாம் படித்த என்.எஸ். சி.யின் ஜாதி துவேசம், அவரை சிறுமைப்படுத்திவிட்டது. ஆனால் , நடராஜனின் எந்த பலனையும் எதிர்பாராது செய்த உதவி, அதனை மறக்காமல் நான் இன்று டாக்டர் ஆவதற்கு நீதான் காரணம் என செந்தில் குறிப்பிட்டது - இருவரையும் உன்னத மனிதர்களாக மாற்றிவிட்டது.
ஜாதி துவேசம் - எங்கள் முன் தலைமுறையில் இருந்தாலும் , எங்களிடம் இல்லாததை குறித்து மகிழ்ந்தோம். ஆனால் சட்ட கல்லூரி மோதல் அதனை பொய்யாக்கிவிட்டது.
- அனந்த ராமன்,செந்திலுக்கு வர வேண்டிய பரிசினை (புத்தகங்கள்) எல்லாம் திரும்ப கொடுத்து விட்டான். இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
- நடராஜன் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டான். அவனின் இறுதி ஊர்வலத்தில் கூட செந்தில், பிராமினான நடராஜன் எப்படி தன்னுடன் அன்பாக பழகினான் என்றும், அவன் தன் வீட்டுக்கு வந்து சொல்லிகொடுததையும் என்னிடம் நினைவு கூர்ந்தான்.
No comments:
Post a Comment